திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்லடம் நகராட்சி 12வது வார்டு மேற்குபல்லடம் ராம் நகர் பகுதியில் ஒடை உள்ளது. அதனையொட்டி ஒடை மற்றும் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது.
அனுப்பட்டி குட்டையிலிருந்து வேலப்பகவுண்டம்பாளையம், பணிக்கம்பட்டி, பாலசமுத்திரம் வழியாக மழை நீர் இந்த ஒடை வழியாக பாய்ந்து சென்று பல்வேறு ஊர்களின் வழியாக சென்று கடைசியில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது.
இந்த ஒடை அருகில் சுமார் இரண்டரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் அம்மா பூங்கா, விளையாட்டு திடல், திருமண மண்டபம் போன்றவை அமைத்து தர அரசை அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இவ்விடத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது.
அதனால் நீர் நிலை வழித்தடம் அடைபடக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் நீர்வழிபாதையானது 200 அடிக்கு மேலாக அகலமாக இருந்தது நாளடைவில் ஆக்கிரமிப்புகளால் தற்போது 100 அடி அகலமாகவுள்ளது. அவசர தீ விபத்துகளுக்கு தீ அணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை குறுகியதாக உள்ளது. பழமையான ஒடை நீர் நிலை புறம்போக்கு நிலம் என்பதால் அவ்விடத்தில் புதிய கட்டடம் கட்டும் போது அதன் ஸ்தரத் தன்மை இழக்க நேரிடும் கட்டடங்கள் வலுவிழுந்து இடிந்து விடும் அதனால் அவ்விடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி தங்களது எதி்ர்ப்பை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தை இக்கோரிக்கைய தொடர்ந்து வலியுறுத்துவது என்றும் தேவைப்பட்டால் ஒன்று திரண்டு போராடுவது என்றும் உறுதி மொழி ஏற்றனர்.